சுந்தரர் (பொன் பெற்ற திருத்தலங்கள்):

நம் தலைவரான சுந்தரனார் பிரதானமாய் நான்கு திருத்தலங்களில் சிவபெருமானிடத்துப் பொன் வேண்டிப் பெற்று மகிழ்ந்துள்ளார், 

(திருப்புகலூர்):
சோழ நாடு, காவிரி தென்கரைத் தலம். பொன் வேண்டிப் பாடிய திருப்பதிகம் நமக்கின்று கிடைக்கப் பெறவில்லை எனினும் செங்கற்கள் யாவும் செம்பொன் கட்டிகளாக மாறுமாறு அருளிய இறைவரைப் போற்றிய 'தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்' எனும் திருப்பதிகத்தைப் பாராயணம் புரிந்து மகிழலாம். 

(திருமுதுகுன்றம்):
நடுநாட்டுத் தலம், இப்பதியில் இறைவர் பன்னீராயிரம் பொன் அளித்தருளியதாகச் சேக்கிழார் பெருமான் பதிவு செய்கின்றார் (ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல்கள் 105; 106; 107). 'நஞ்சி இடை', 'மெய்யை முற்றப் பொடிப் பூசியொர் நம்பி' என்று துவங்கும் இத்தலத்திற்கான இரு திருப்பதிகங்கள் பொன் வேண்டும் குறிப்புடன் பாடப் பெற்றுள்ளவை. 
(திருப்பாச்சிலாச்சிரமம்): 
சோழ நாடு, காவிரி வடகரைத் தலம். முதலில் பொன் அருளாது திருவிளையாடல் புரிந்துப் பின் சுந்தரனார் 'இவரலாது இல்லையோ பிரானார்' என்று உரிமையோடு முறையிட்டுப் பாடிய பின்னர் பெரும் பொற் குவியலை அளித்தருள் புரிகின்றார் ('விழுநிதிக் குவைஅளித்தருள' என்றிதனைத் தெய்வச் சேக்கிழார் 'ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 82ல் பதிவு செய்கின்றார்). 
(திருஓணகாந்தன்தளி): 
முதல் காஞ்சி யாத்திரை சமயத்தில், 'நெய்யும் பாலும்' என்று துவங்கும் திருப்பதிகம் பாடி விண்ணப்பிக்க, முக்கண் முதல்வர் எண்ணிலடங்கா செல்வத்தினை அளித்தருள் புரிகின்றார் ('எண்ணில் நிதிபெற்றினிதிருந்தார்' என்று சேக்கிழார் பெருமான் 'ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 191ல் பதிவு செய்கின்றார்).
சில விளக்கங்கள், திருமுருகன்பூண்டியில் சுந்தரர் பொன் வேண்டி விண்ணப்பிக்கவில்லை, சேரமான் பெருமாள் நாயனார் தமக்களித்திருந்த பொற்குவியலை வேடர்கள் பறித்துச் சென்று விட, அது குறித்து முறையிட்டுத் திருவருளால் மீண்டும் அவைகளைப் பெற்று மகிழ்கின்றார். விண்ணப்பம் இல்லாமையால் பொன் பெற்ற திருத்தலமாக இது குறிக்கப் பெறுவதில்லை. 

இறுதியாய்த் திருநாகைக்காரோணத்தில், முத்தாரம்; மாணிக்க வயிர மாலைகள்; கத்தூரிச் சாந்து; பட்டாடை;  பொற்கட்டிகள்; நறுமணப் பொருட்கள்; திருவாரூர் செல்வத்தில் மூன்றிலொரு பங்கு; குதிரை; பொன்னாலான உடைவாள்; பொற்றாமரைப் பூ, பட்டுக் கச்சம்; காய்கறிகளோடு கூடிய சுவையான நெய்யுணவு; முத்து மாலைகள் முதலிய எண்ணிறந்த செல்வங்களை விண்ணப்பித்துப் பாடுவதால், பொன் மட்டுமே பெற்ற திருத்தல வரிசையில் இத்தலமும் பொதுவில் குறிக்கப் பெறுவதில்லை, குறித்தாலும் அது ஏற்கக் கூடியதே.

No comments:

Post a Comment