திருஞானசம்பந்தர் முருகப் பெருமானின் அவதாரமா? (ஆதாரபூர்வ விளக்கங்கள்):

அருணகிரிப் பெருமான், எண்ணிறந்த திருப்புகழ் திருப்பாடல்களில், ஞானசம்பந்தர் நிகழ்த்தியுள்ள அற்புதங்களை முருகப் பெருமானின் திருச்செயல்களாகவே போற்றியுள்ளார். விராலிமலைத் திருப்புகழில்,  பாண்டியனின் வெப்பு நோய் போக்கிய நிகழ்வினை 'மதுரா புரேசர் மெய்க்க அரசாளும் மாறன் வெப்பு வளை கூனையே நிமிர்த்த தம்பிரானே' என்று முருகப் பெருமானின் மீது ஏற்றிப் பாடுகின்றார். ஆதலின் ஞானசம்பந்தர் முருகப் பெருமானின் அவதாரமா? என்பது குறித்து இப்பதிவில் சிந்தித்துத் தெளிவோம், 

சாரூபம்; சாமீப்யம்; சாலோகம்; சாயுச்சியம் எனும் நால்வகை முத்திப் பேறுகளுள், முன்னமே முருகக் கடவுளுடைய சாரூப முத்தி பெற்றுத் திருக்கயிலையிலிருந்த முத்தான்மா ஒருவரையே சிவபெருமான் திருஞானசம்பந்தராக இப்புவியில் அவதரிக்கச் செய்கின்றார் என்று பரம குருநாதரான நம் வாரியார் சுவாமிகள் தெளிவுறுத்துகின்றார். இவ்வகை முத்தான்மாக்கள் ஆறுமுகங்கள்; பன்னிரு கரங்களும் கொண்டு அபர சுப்ரமண்யர்களாக விளங்கி வருவர் என்று விவரிக்கும் நம் சுவாமிகள் பின்வரும் பெரிய புராணப் பாடலையும் அகச் சான்றாக முன்வைக்கின்றார்,

(பெரிய புராணம்: திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 55)
பண்டுதிருவடி மறவாப் பான்மையோர் தமைப் பரமர்
மண்டுதவ மறைக்குலத்தோர் வழிபாட்டின் அளித்தருளத்
தொண்டின்நிலை தரவருவார் தொடர்ந்த பிரிவுணர்வொருகால்
கொண்டெழலும் வெருக்கொண்டாற் போல்அழுவார் குறிப்பயலாய்

முதல் இருவரிகளில், 'முன்பு திருவடி மறவாத தன்மையில் விளங்கியிருந்த முத்தான்மா ஒருவரை, திருத்தொண்டின் தன்மையை உலகுக்கு வகுத்துரைக்க, சிவபாத இருதயருக்கு திருக்குமாரராக சிவபெருமான் அவதரிக்கச் செய்கின்றார்' என்று சேக்கிழார் பெருமான் ஆச்சரியமாய் பதிவு செய்துள்ளார்.

மேற்குறித்துள்ள சுவாமிகளின் கருத்துக்களை உள்ளத்து இருத்தி இன்னபிற கோணங்களிலும் இதனை விரிவுபடுத்திச் சிந்திப்போம், பரம்பொருளான சிவமூர்த்திக்கு அடியவர்களுக்கா குறை?, சுவாமியின் கடைக்கண் நோக்குக்காக கடும் தவமியற்றிக் காத்திருக்கும் எண்ணிறந்த சித்தர்; தவமுனிவோர்; தேவர்; கின்னரர்; கணங்கள்; அருளாளர்கள்; ஞானிகள்; திருத்தொண்டர் என்று பலரிருக்க, சிவசுவரூபியான முருகக் கடவுளைத் தன்னைப் பாடுவிக்கும் பொருட்டு அனுப்புவிப்பது என்பது எவ்விதத்திலும் ஏற்புடைய கருத்தாகாது (சிவபெருமானுக்கும் முருகக் கடவுளுக்கும் பேதமில்லை என்பது கந்தபுராண வாக்கு). 

பிறவித் துன்பத்தினின்றும் உய்வு பெறும் நன்னெறியினைக் காட்ட, இப்புவியில் பிறவியெடுத்து, சஞ்சித; பிராரப்த; ஆகாம்ய வினைச் சூழலில் சிக்கி உழன்று, எண்ணிறந்த இடர்களுக்கு இடையில் மெதுமெதுவே சிவஞானப் பாதையில் பயணித்து, சிவபரம்பொருளின் திருவருளால் மும்மலங்களையும் களைந்து சிவமாம் பேறு பெற்றுள்ள முத்தான்மா ஒருவரன்றோ பொருத்தமானவராக இருக்க இயலும்! ஆதலின் சிவஞானப் பெருவெளியில் நின்றாடும் ஆறுமுக தெய்வத்தைக் காட்டிலும் கந்தக் கடவுளின் திருவடி மறவாப் பண்பினரான அடியார்களே நமை உய்விக்க உரித்தானவர் என்பது தெளிவு. 

சம்பந்தப் பிள்ளையார் ஒவ்வொரு சிவாலயத்திலும் பெற்றுள்ள தரிசன அனுபவத்தினைத் தெய்வச் சேக்கிழாரின் பாடல் வரிகள் மூலம் கண்டுணர்ந்தால் சீர்காழி அரசர் நம்மவர் (ஜீவான்மாக்களுள் ஒருவர்) என்பது தெள்ளென விளங்கும். இறைவன் பாடுவிப்பவன், தன்னைத் தானே உருகி உருகி இறைவனே பாடிக் கொள்வதென்பது ஒவ்வாத கருத்து. திருத்தொண்டர் புராணத்தில் இறையவரையும் சேர்ப்பதோ? 

ஆதலின் அருளாளர்கள் உபச்சார மார்க்கமாகவே சம்பந்தரின் செயல்களை முருகப் பெருமானின் மீது ஏற்றிப் போற்றியுள்ளனர் எனும் புரிதல் அவசியம். ஞானசம்பந்தர் நம்முள் ஒருவர் என்று உணர்ந்து அனுபவிப்பதே ரசமான; சுவையான; அற்புதமான அனுபவம், சீர்காழிச் செல்வர் தொண்டர் தலைவர், பதியாகிய சிவபரம்பொருளோடு நம்மை இணைக்கும் தெய்வீகப் பாலமாய் விளங்குபவர் (சிவ சிவ)!!!.

No comments:

Post a Comment